Monday, October 27, 2014

ஆர் அறிவு என்றிருந்து வடிவோனே!

தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
      தானதன தந்த தந்த ...... தனதான



வானவரும் பெற்றதந்த மாதுதனைக் கைப்பிடிக்க
      வாதையரின் கொற்றொடித்த மயில்வீரா!
வாகைமலர் கொண்டுவந்து சூடுஎனத் தந்ததந்த
      வேலுடைய கைதிறந்து அருள்வோனே!

கானமுடை வெற்புறைந்த கோதைகுறத் திக்குகந்த
      காதல்தர வந்திறங்கி யணைவோனே!
காவலுடை நெஞ்சகத்து வாயிலது கண்டிடித்துக்
      காணறிவு தந்துணர்த்தி யுறைவோனே!

ஆனபல வையகத்து மாயையது பெற்றெடுத்த
      ஆருருவம் எங்குமங்கு அழகாக
ஆவலிரு ஐந்துணர்ந்த ஆர்புலனெங் கும்வழிந்த
       ஆர்அறிவு என்றிருந்து வடிவோனே!

மானவரின் உள்ளுறுத்து மாயையது கண்டிருக்கு
      மாருயிரின் உள்ளிருந்து இயல்வோனே!
மாவின்கனிக் கென்றுவந்து ஆவின்குடி யங்கமர்ந்து
      மாபழநி வெற்புறைந்த பெருமாளே!

No comments:

Post a Comment