Saturday, May 4, 2013

உள்ளம் ஆளும் பெருமாளே!

தய்யதன தான தய்யதன தான
      தய்யதன தானத் ...... தனதான


மெய்யறிவு காணப் பெய்யளவி லாத
      மெய்யருளைத் தாராய் முருகோனே!

மண்பதியும் ஆலின் மெல்லிலையின் மீதில்
      வந்துதியு மாலின் மருகோனே!

கையிலுள வேலைப் பொய்கயவர் ஆவி
      கொய்தெறிய வீசும் பெருமாளே!

கொங்குமலர்க் காடு கண்டகுறக் கோதை
      கண்ணினிய காதற் தலைவோனே!

மையலிலே நானுந் துஞ்சியது போதும்
      வையகமு வாழக் கனிவாயே!

பொன்மணிகள் வீசு மென்சுடரைப் போல
      மின்னுமுகம் காணக் கடவேனோ!

உய்யுகிற வாழ்வு உந்தனடிக் கீழே
      என்றுமுறத் தாளும் அருள்வாயே!

உள்ளமெனுக் கூறும் கல்லளையில் நாளும்
      உள்ளிருந்து ஆளும் பெருமாளே!

No comments:

Post a Comment